பொங்கலுக்கு ரூ 3000! வரும் 9ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது! அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிப்ரவரி 7ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இதையடுத்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் மேற்கண்ட பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. எந்த ரொக்கமும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்னும் இரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மக்களுக்கு ரூ 5000 கொடுக்குமாறு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. அது போல் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி கொள்முதல் செய்ய மட்டும் அரசு ரூ 234 கோடியை ஒதுக்கீடு செய்ததால் இந்த ஆண்டும் ரொக்கம் இல்லை என கருதப்பட்டது.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தலா 3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. வரும் 8ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்காக வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளுக்கு பதிலாக பிப்ரவரி 7ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. எனவே இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது.












Click it and Unblock the Notifications