போலீஸ் கஞ்சாவை மட்டும் பிடிக்கிறது.. ஆளுநர் ரவி ஒரே போடு! அதெல்லாம் கிடையாது.. அறிக்கை விட்ட டிஜிபி!
சென்னை : தமிழகத்தில் கஞ்சா மட்டுமே பிடிப்படுவதாகவும், போலீசாரால் பிற போதை பொருட்கள் பிடிபடாமல் இருப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்த நிலையில் மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் மிகக் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது என தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு போலீசாரால் ஒரு கிராம் கூட ரசாயன போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் கஞ்சா மட்டுமே பிடிபட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசியல் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி வீசுவதையும் ஆளுநர் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் என காட்டமாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் போதைப் பொருள் பரவல் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," போதைப்பொருள் ஒழிப்பை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசும் காவல்துறையும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க அன்றாட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கடந்த 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் முதல் மாநில அளவிலான மாநாடு ஒரு மைல் கல் ஆகும். இத்தகைய சட்டவிரோத மருந்துகளின் உற்பத்தி போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையின் கடுமையான முயற்சிகளால் மாநிலம் கஞ்சா சாகுபடி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கொண்டு வரப்படும் பிரச்சினை தென் மாநில காவல்துரை இயக்குநர்கள் மாநாடு உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய மன்றங்களில் எழுப்பப்பட்டது. இத்தகைய தொடர் முயற்சியின் விளைவாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிறப்பு அமலாக்கப் பணியகம் (SEB) 2021 ஆம் ஆண்டில் ஆபரேஷன் பரிவர்தன் என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 4000 கோடி சந்தை மதிப்புடைய 6,41,610 ஏக்கர் நிலப்பரப்பில் வளர்க்கப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டது.

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கல் தொடர்பாக 2022-ல் 645 பேர், 2023-ல் 504 பேர், 2024 ஆகஸ்ட் வரை 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் ஆகஸ்ட் 2024-வரை போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களின் 8,949 வங்கி கணக்குகளில் ரூ.18.03 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டு வரையில் 641 வழக்குகளில் 1965 கிலோ கஞ்சா, 10634 போதை மாத்திரைகள், 35,500 கிலோ மற்ற மருந்துகள், மெத்தம் பெட்டமைன், ஆம்பெடமைன், கஞ்சா சாக்லேட்டுகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் 1148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப் பொருள் தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்குவங்கம், அருணாச்சல பிரதேசம் என 6 பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட 52 பேர் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக தமிழகத்தில் போதைப் பொருள் பரவலாக இருப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் போதைப் பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பரவல் குறித்து இந்திய அரசால் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, கஞ்சாவின் பயன்பாடு தமிழகத்தில் 0.1 சதவீதம் (35வது இடம்), தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிகக் குறைவு. அதேபோல் தமிழகத்தில் ஓபியம் வகை போதைப் பொருள் பயன்பாடு 0.26 சதவீதம் (35வது இடம்), இது தேசிய சராசரியான 2.06 சதவீதத்தை விட மிகக்குறைவு. இதேபோல், மனமயக்க மருந்துகளின் பயன்பாடு 0.3 சதவீதம் (33வது இடம்) இது தேசிய சராசரியான 1.08 சதவீதத்தை விட மிகக்குறைவு. தமிழகத்தில் போதைப் பொருட்களின் பரவல் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications