தமிழகத்துக்கு 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி ப்ளஸ் மத்திய அரசு செய்தது இத்தனையும்- நிர்மலா சீதாராமன்
சென்னை: தமிழ்நாட்டுக்கு 10 ஆன்டுகளில் ரூ7 லட்சம் கோடியும் பல்வேறு திட்டங்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறப்பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு 6.8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மட்டும் 1.5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில்
57 லட்சம் மற்றும் நகரப்புறங்களில் 5.23 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 6751 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் 6340 பயனாளிகள் பயனடைந்திருக்கின்றனர்.
மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் மாநிலம் முழுவதும் 37 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். சென்னையில் 32,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்கு எதுவுமின்றி 3.64 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தமட்டில் 25.7 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
மக்கள் வங்கித் திட்டம் எனப்படும் ஜன் தன் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பேருக்கு இருப்புத் தொகை ஏதுமற்ற வங்கி கணக்குகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன. இதில் 58 சதவீதம் பெண்கள்.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உத்தரவாதமின்றி 2.67 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 5.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு 2200 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதே போல் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 3.6 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றதில் 67 சதவீதம் பேர் பெண்கள்,
32 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 18 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
சென்னை- பெங்களூர் விரைவுச் சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
150 கி.மீ. கிழக்கு கடற்கரை சாலை ரூ.3000 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் திட்டத்தைப் பொருத்தவரை இந்த ரயிலுக்கான அனைத்துப் பெட்டிகளும் சென்னை பெரம்பூர் இணைப்பு ரயில்பெட்டி (ஐசிஎப்) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் 4 வழித்தடங்களில் இந்த ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரிப்பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 2.8 லட்சம் கோடி ரூபாயும், மானியங்கள் மற்றும் உதவித் தொகை அடிப்படையில் அதே காலகட்டத்தில் 2.58 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் மூலம் தமிழ்நாடு வெறும் 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி வரியைப் பொறுத்தவரை, மாநில ஜிஎஸ்டி வரி வருவாயில்
100 சதவீதமும் மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கும் இது பொருந்தும். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 36,353 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மத்திய ஜிஎஸ்டியை பொறுத்தவரை 41 சதவீதம் மாநிலத்திற்கே ஒதுக்கப்படுகிறது.
மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்த, 37,965 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்த 11,116 கோடி ரூபாயும், கிராம சாலைகள் திட்டத்திற்கு 3637 கோடி ரூபாயும், வீட்டு வசதி திட்டத்திற்கு 4739 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications