தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம்
சென்னை: தமிழக அரசு டிசம்பர் 31 வரை லாக்டவுனை நீடித்துள்ள போதிலும், சுற்றுலா தலங்களை திறக்கவும் அரசியல், சமுதாய, பொழுதுபோக்கு, மத கூட்டங்களை உள் அரங்கில் நடத்த அனுமதி அளித்துள்ளது. வர்த்தகர்கள் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் லாக்டவுனில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் பேருந்து மற்றும் ரயில்களை இயக்க அனுமதி அளித்த அரசு அதன்பிறகு கொரோனா குறைய குறைய படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது.
கடந்த மாதம் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த அரசு, கொடைக்கானல், ஊட்டி , ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் தள சுற்றுலா தளங்களுக்கு இபதிவு முறையுடன் அனுமதி அளித்தது. ஆனால் கூட்டம் நடத்த , நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது. கல்லூரிகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
சுற்றுலா தலங்கள்
இந்நிலையில் தமிழக அரசு டிசம்பர் மாதத்தில் ஊரடங்கை நீட்டித்தாலும் சுற்றுலா தலங்கள் திறப்பு, கூட்டங்கள் நடத்த அனுமதி என பல்வேறு தளர்வுகளை அறிவத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி, "வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது
பொருட்காட்சி
பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
திறந்தவெளி கூட்டங்கள்
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.
வெளிமாநிலங்கள்
வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்" என்று கூறியள்ளது.