மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.. பிளாஸ்டிக் பைகளுக்கு அதிரடி தடை.. தமிழக அரசு புது உத்தரவு!
சென்னை: 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று கூறியுள்ளது.
உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாக மக்காமல் இருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும், இயற்கை வளங்களையும் நாசப்படுத்தி வருகிறது.

இதனால் பல்வேறு நாடுகளும் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து வருகின்றன. இந்தியாவிலும் பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் தீமையை கருத்தில் கொண்ட தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 51 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார். அதாவது 51 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கான தடை என்பது 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதுவரை தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications