கிரைய பத்திரம் பண்றீங்களா.. கட்டிடத்தின் பணிமுடிப்பு சான்றிதழ் இருக்கா? தமிழக அரசின் அதிரடி பாருங்க
சென்னை: கட்டிடத்தின் பணி முடிப்பு சான்றிதழ் இருந்தால் கட்டுமான ஒப்பந்தம் பதிவு தேவையில்லை என்றும், அதே நேரம் வீட்டின் முழு பரப்புக்குமான பதிவை கட்டாயமாக்கி பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை, முதல் விற்பனை பதிவு என்றால், வீடு வாங்குவோருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் பிரிக்கப்படாத பகுதி அளவுக்கு மட்டுமே கிரைய பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

தனிநபர்: அதாவது, ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரைய பத்திரம் ஆகும். மேற்படி கிரையப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவதுதான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
இந்த கிரையப்பதிவுக்கு முன்பு, கட்டுமான நிறுவனத்துக்கும், வீடு வாங்குபவருக்கும் இடையிலான கட்டுமான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2020-ல் கட்டிடத்தின் பணி முடிப்புசான்றிதழ் இருந்தால், கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யாமல், நேரடியாகவே கிரையம் செய்துவிடலாம்.. ஆனால், முதல் பதிவில் பிரிக்கப்படாத பகுதியை மட்டும் பதிவு செய்தால் போதுமானது.
கட்டுமான ஒப்பந்தம்: சூப்பர் கட்டுமானப்பகுதி என முழுமைக்கும் பதிவு தேவையில்லை என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரம், பணிமுடிப்பு சான்றிதழ் இல்லாதபட்சத்தில், கட்டுமான ஒப்பந்தம் பதிவுசெய்ய வேண்டியிருந்தது.
ஆனால், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பதிவுத்துறை தலைவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.. காரணம், கட்டுமான நிறுவனங்கள் பணி முடிப்பு சான்றிதழ்பெற்றுவிட்டதாக சொல்லி, நேரடியாகவே பலர் கிரைய பத்திரம் பதிவு செய்வதாகவும், இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதிரடி வாபஸ்: இந்த கோரிக்கையைதான் தற்போது தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.. அத்துடன், 2020-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தையும் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, பதிவுத்துறை செயலர்ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி பணி முடிப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே கட்டுமான ஒப்பந்தம்பதிவு செய்யாமல் நேரடியாக கிரைய பத்திரம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கட்டுமான ஒப்பந்தம் செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த அறிவிப்பானது, அரசுக்கும் வீடு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.. முதல் பதிவாக இருந்தாலும் முழுமைக்கும் பதிவு செய்வதால், செலவு அதிகரித்தாலும் ஜிஎஸ்டி வாயிலாக 1.5 சதவீதம் வரை வாடிக்கையாளருக்கு கட்டணம் குறையும் என்றும், கட்டுமான நிறுவனங்களுக்கு இந்த கணக்குகளை கையாள்வதும் எளிது என்றும் நம்பப்படுகிறது.
லாபம்: ஆக, முதல் பதிவாக இருந்தாலும், இனிமேல், வீட்டின் பரப்பு முழுமைக்கும் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை மீண்டும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications