தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்?
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பால் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என்னென்ன கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அவர்கள் கோரி வந்த இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன. டிசம்பர் 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் அவை அழைப்பு விடுத்திருந்தன.
கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடங்கிய குழு நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதனால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும் என சங்கக் கூட்டமைப்புகள் அறிவித்தன.
இந்த நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, ஓய்வூதியத் திட்டம் பற்றிய தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் அறிவித்த சங்கங்களை அமைச்சர்கள் குழு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்துகொண்டார். அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, TAPS திட்டத்தை வெளியிட்டார்.
இந்த புதிய திட்டத்தில் யாருக்கெல்லாம் பயன் என்பதை பார்க்கலாம்.
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அரசு ஊழியர்களுக்குக் கிடைப்பது போன்ற அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். மேலும், ஓய்வூதியதாரர் காலமானால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 60% குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருக்கும்போதே காலமானால், அவர்களது பணிக்காலத்திற்கு ஏற்ப ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். தகுதியான பணிக்காலத்தை முடிக்காத ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் கொடுக்கப்படும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (Contributory Pension Scheme) சேர்ந்து, TAPS திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் ஓய்வூதியம் இல்லாமல் பணி ஓய்வுபெற்றவர்களுக்குச் சிறப்பு கருணை ஓய்வூதியமும் வழங்கப்படும்.
TAPS திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு அரசு கூடுதலாக ரூ.13 ஆயிரம் கோடி உடனடியாக செலுத்த வேண்டும், மேலும் ஆண்டுதோறும் சுமார் ரூ.11 ஆயிரம் கோடியை பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். ஊழியர்களின் சம்பள உயர்வுக்கேற்ப இந்தத் தொகை மேலும் கூடும்.
கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் காக்க இந்த மிகப் பெரிய செலவை அரசு ஏற்றுக் கொள்ளும். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக இது பலன்களையும் பணப் பயன்களையும் வழங்கும்.
இந்தத் திட்டத்தை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வரவேற்று, அதன் சிறப்பாகச் செயல்பட முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications