சொன்னீங்களே, செஞ்சீங்களா? திமுகவுக்கு கேள்வி.. ஆசிரியர்கள் இன்றும் ஸ்ட்ரைக்! குலுங்குது சென்னை டிபிஐ
சென்னை: அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் இன்றைய தினமும் நடக்க உள்ளது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) போராட்டம் அறிவித்திருந்தது.

சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.. இதனால், முன்கூட்டியே டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் நேற்று முன்தினமே அடைக்கப்பட்டுவிட்டன.. இதனால், அடையாள அட்டையை காட்டிய பிறகே, அங்கு பணியாற்றும் அலுவலர்களும், ஊழியர்களும், டிபிஐ உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
முற்றுகை: ஏற்கனவே அறிவித்தபடியே, நேற்று காலை 10 மணிக்கு டிபிஐ வளாகத்தை முற்றுகையிடுவதற்காக இடைநிலை ஆசிரியர்கள் வந்தனர்.. ஆனால், அவர்கள் அனைவருமே குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்கள்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளிலுமே திரண்டிருந்த அனைவருமே ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.. கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பஸ்களில் கொண்டு செல்லப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்..
போராட்டம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னாடியே கைது செய்வது ஜனநாயக விரோதம் என்றார்கள்.. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, இதே டிபிஐ அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். உடனே இயக்குநர் மட்டத்திலும், அடுத்து செயலாளர் அளவிலும், அடுத்து அமைச்சர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எங்களது 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்கு, அதில், 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி தந்தார்கள். ஆனால், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. இப்போது பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து, மொத்தம் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
பதவி உயர்வு: இந்த ஒரே ஒரு அரசாணையால் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... அதில் பெரும்பாலும் ஆசிரியைகளே உள்ளதால், இவர்களது பதவி உயர்வு பாதிக்கப்படும் நிலைமை உள்ளது. தங்களது குடும்பத்தை விட்டு பெண் ஆசிரியைகள் வேறு மாவட்டத்திற்கு சென்று பணியாற்றுவதும் கஷ்டமான விஷயம்.. அதனால், அந்த அரசாணையை ரத்து செய்து, எங்களது மற்ற கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதுமட்டுமல்ல, திமுக எதிர்கட்சியாக இருந்தப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டார்கள். ஆனால், அதை இன்றுவரை செய்யவில்லை.. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கட்டணமில்லா சிகிச்சை: அதேபோல NHIS சிகிச்சை திட்டத்தின் மூலம் எங்களின் ஊதியத்திலிருந்து மாதந்தோறும் 300 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுவதால், கட்டணமில்லா சிகிச்சையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.. ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்... எனினும், ஏற்கனவே அறிவித்தபடியே முற்றுகை போராட்டம் 31-ம் தேதியான இன்றும் தொடரும் என்று திடமாக கூறியிருக்கிறார்கள்.
பரபரப்பு: முதல் நாளான நேற்றுமுன்தினம் நடந்த போராட்டத்தில், 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், நேற்று 14 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.. இன்றைய தினம் மீதமுள்ள மாவட்ட ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்துக் கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு சூழ்ந்துள்ளது. இது திமுக அரசுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுததி வருகிறது.












Click it and Unblock the Notifications