சும்மா அரசியல் பேசாம.. கஞ்சாவை கட்டுப்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு எல்.முருகன் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே உள்ளது என்றும் கஞ்சா, போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்த்து ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
போதைப்பொருட்களை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு இதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொன்முடி Vs முருகன்! கண்முன்னே வந்த 'மதுரை’ சம்பவம்! சாமர்த்தியமாய் சமாளித்த அண்ணா பல்கலை.! சிறப்பு!
போதைப்பொருள் புழக்கம்
அதன்படி, போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிப்பது பெரும் சவாலாகவே போலீசாருக்கு உள்ளது.
வட மாநிலங்களில் இருந்துதான் வருகிறது
இந்த நிலையில், சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பொன்முடி, ''போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அது பலமடங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிற துறைமுகங்கள் தான். குஜராத் உள்பட வட மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதைப்பொருள் தமிழ்நாட்டிற்குள் வருகிறது.
வீணான அரசியலை தவிர்த்து விட்டு
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இங்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை எல்லாம் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன், வீணான அரசியலை தவிர்த்து விட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசின் கடமை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பங்கேற்ற எல். முருகன், இது குறித்து பேசியதாவது:- ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே உள்ளது. கஞ்சா, போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.