“தப்பு தப்பா மந்திரம்?”.. அறநிலையத்துறையை விமர்சித்து பரவும் வீடியோ.. தமிழக அரசு விளக்கம்!
சென்னை: "அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறி இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலையத் துறை." என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது அறநிலையத்துறைக்கு எதிராக பரவும் வதந்தி என்றும், தவறாக மந்திரம் ஓதியது "கிளி ஜோசியர்" என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது. "அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம்; இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலையத் துறை" என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. "இது முற்றிலும் தவறான தகவல்" என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
அதில், "ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை சடங்கில் தவறாக மந்திரம் ஓதிய நபர் அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயின்றவர் இல்லை. பழனி மலையடிவாரத்தில் கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தவர். அவர் பெயர் சுப்பிரமணியன்.
அக்னி தீர்த்தக் கரையில் இயங்கும் புரோகிதர் சங்கத்தினர் இவரைபோல் 20 நபர்களை அழைத்து வந்து பூணூல் அணிவித்து புரோகிதம் செய்ய வைத்துள்ளனர். இவருக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கோயில் இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications