வயநாடு நிலச்சரிவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல், மீட்பு பணிக்கு உதவ தமிழகம் தயார் என அறிவிப்பு
சென்னை: கேரளாவின் வயநாடு மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள பெருந்துயர சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இர்ங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு பேரிடர் குழுக்களை அனுப்பி உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலைப் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவும் காட்டாற்று வெள்ளமும் பாய்ந்து ஓடியதால் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அப்படியே நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரளா மாநில அமைச்சர்களும் மீட்பு பணி நடைபெறும் இடங்கள், மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். ராணுவத்தின் உதவியை கேரளா முதல்வர் பினராயி விஜயன் கோரியுள்ளார்.
கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும், காயமடைந்தவர்களுடன் பிரார்த்தனைகளும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரள முதல்வர்
பினராயி விஜயனுடன் பேசியதோடு, அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தேன் என்றார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இதேபோல தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், கேரளா நிலச்சரிவு நிகழ்வு பெரும் துயரத்தைத் தருகிறது. நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கி இருப்பதாகவும் அறிந்தேன். இந்த துயரமான தருணத்தில் சகோதர மாநிலமான கேரளாவுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications