ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூ. 6 உயர்வா? உண்மை என்ன? - தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றி தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி எனத் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு 6 விலை அதிகரித்துள்ளது என்ற செய்தி சமூகவலைதளங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட் என்றும் இதனை தவறாக புரிந்து கொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி ! கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட் ஆகும்." என்று தெரிவித்துள்ளது.
"இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5% இதரச் சத்துக்கள்: 9% SNF உயர்த்தப்பட்டு உள்ளது. கொழுப்புச் சத்து: 4.5% மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5% SNF கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்!"என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications