இத்தனை வாகனங்களா? பிஎஸ்-IV வாகனப் பதிவில் மிகப்பெரிய முறைகேடு.. கொத்தாக மாட்டும் ஆர்டிஓ அதிகாரிகள்
சென்னை: உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பிஎஸ்-IV என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆர்ஓடி அலுவலகங்கள் முறைகேடாக பதிவு செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மட்டும் 315 பிஎஸ்-IV என்ஜின் வாகனங்கள் இதுபோல முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தமிழகம் முழுவதும் எத்தனை பிஎஸ்-IV வாகனங்கள் பதிவில் முறைகேடு நடந்திருக்கும் என சற்று சிந்தித்து பாருங்கள்.
தற்போது இந்த விவகாரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் முறைகேடாக பிஎஸ்-IV வாகனங்களை முறைகேடாக பதிவு செய்த ஏராளமான ஆர்டிஓ அதிகாரிகள் சிக்குவார்கள். அதேபோல, இந்த வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்பதால் பொதுமக்களும் கலக்கத்தில் உள்ளனர்.
பிஎஸ்-IV இன்ஜினும், உச்ச நீதிமன்றத் தடையும்..
முதலில் இந்த மாபெரும் முறைகேடு குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னர், பிஎஸ்-IV இன்ஜின் வாகனங்கள் என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம். நாம் வைத்திருக்கும் கார், மோட்டார் சைக்கிள்களில் இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த இன்ஜின்களில் இருந்து வெளியாகும் புகை அளவை பொறுத்து பிஎஸ் I, பிஎஸ் II என அவை தரம்பிரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு இந்த இன்ஜின்களில் இருந்து வெளியாகும் புகை எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த வாகன இன்ஜின்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிஎஸ்-IV இன்ஜின்களுக்கு தடை விதித்தது. எனவே, இனி கார், மோட்டார் சைக்கிள் வாங்குவோர் பிஎஸ் V இன்ஜின் கொண்ட வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கார் ஷோரூம்களின் 'மாஸ்டர் பிளான்'..
சரி., இப்போது நம் செய்திக்கு வருவோம். உச்ச நீதிமன்றத்தின் இந்த தடையால் பிஎஸ்-IV இன்ஜின் வாகனங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கார், பைக் ஷோரூம்கள் கலக்கம் அடைந்தன. இதனால் இந்த வாகனங்களை எப்படியாவது மக்கள் தலையில் கட்டிவிட முடிவு செய்த அவர்கள், அதிரடி விலை குறைப்பில் ஈடுபட்டனர். அதாவது, ரூ.20 முதல் ரூ.35 லட்சம் வரையிலான வாகனங்கள் ரூ.10 லட்சத்துக்கு விற்கப்படுவதாக கார் ஷோ ரூம்கள் அறிவித்தன. இதனை பார்த்து மயங்கிய மக்கள், உச்ச நீதிமன்றத்தின் தடை பற்றி அறியாமல் இந்த பிஎஸ்-IV இன்ஜின் வாகனங்களை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றனர்.
விளையாடிய ஆர்டிஓ அதிகாரிகள்..
இந்நிலையில், இந்த வாகனங்களை மக்கள் தலையில் கட்டிவிட்டால் மட்டும் போதுமா.. அந்த வாகனங்களை ஆர்டிஓ அலுவலகங்கள் பதிவு செய்ய வேண்டுமே.. இதனால் ஆர்டிஓ அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளையும் கையில் போட்டுக் கொண்டு இந்த பெரிய அளவிலான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. லஞ்சப் பணத்துக்கு மயங்கிய பல ஆர்டிஓ அதிகாரிகளும் இதுபோன்ற வாகனங்களை 'மறு பதிவு' என்ற வரையறையின் கீழ் நைசாக பதிவு செய்துள்ளனர். எனவே, மேற்குறிப்பிட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வரையறையில் வராது. எனவே ஆர்டிஓ அலுவலகங்களில் 'வாகன்' (vahan) என்ற சாஃப்ட்வேரிலும் இந்த வாகனங்கள் பதிவை கண்டுபிடிக்க முடியாது.
வெளிச்சத்துக்கு வந்த முறைகேடு..
இந்த சூழலில், பிஎஸ்-IV இன்ஜின் பொருத்திய காரை வாங்கிய ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு பெயர் மாற்றத்துக்காக ஒரு ஆர்டிஓ அலுவலகத்தை அணுகிய போது, அவரது வாகனம் புதிய வாகன பதிவின் கீழ் வராததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. முதன்முதலாக நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மட்டும் நவம்பர் 2020 - செப்டம்பர் 2022-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 315 பிஎஸ்-IV வாகனங்கள் இதுபோல முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.23 லட்சத்துக்கு சாலை வரி ஏய்ப்பு நடந்திருப்பதோடு, பல கோடி மதிப்பில் ஊழல் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அடுத்த நடவடிக்கை என்ன?
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் கூறுகையில், "வளசரவாக்கத்தில் உள்ள ஒரு ஆர்டிஓ அலுவலகத்திலேயே இத்தனை வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில், தவறிழைத்த ஆர்டிஓ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிஎஸ்-IV வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்படும்" என்றார்.