நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பம்பரத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் - மதிமுகவினர் மகிழ்ச்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தங்களின் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியதால் மதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பலமுனைப்போட்டி
இதனிடையே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மநீம மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன. அரசியல் பின்புலம் இருந்தாலும் வார்டுகளில் சொந்த செல்வாக்கு உள்ள வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகும்.

திமுக கூட்டணி
திமுக தரப்பைப் பொறுத்தவரைக் கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இப்போதும் கூட அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மதிமுக பேச்சுவார்த்தை
திமுக மதிமுக இடையே பேச்சுவார்த்தை வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, "இடப்பங்கீடு பேச்சுவார்தைத சுமுகமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார். விரைவில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார். நாங்கள் எப்போதும் திமுக உடன் கைகோர்த்து நிற்கிறோம் என்றும் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட சின்னம்
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம். அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சியினர் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு விருப்பமான சின்னத்தில் களமிறங்குகின்றன. சட்டசபைத் தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பம்பரம் சின்னம்
மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. தங்களின் சின்னம் மீண்டும் கிடைத்ததில் மதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கவும் முடிவு செய்துள்ளனர். வைகோவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அவரால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். அவரால் பிரசாரம் செய்ய முடியாது என்பது மதிமுக நிர்வாகிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications