உள்ளாட்சித் தேர்தல்: சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த மாவட்டங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. இந்த 6 மாவட்டத்தில் மிக அதிகம்.. 3-வது அலை அறிகுறியா?
உள்ளாட்சித் தேர்தல்
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி விட்டது.
சனிக்கிழமை
செப்.22-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுளள்து. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை மிக ஆர்வமுடன் தாக்கல் செய்து வருகினறனர். இந்த நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டால்..
வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவர். அவர் உடன் வேறு யாரும் அனுமதிக்கபட மாட்டார்கள் என்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவரை முன்மொழிபவர் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அரசியல் கட்சிகள்
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன.