பாஜக ராகவனுக்கு ஆதரவாக பேசுவதா? சீமானுக்கு எதிராக கொந்தளிக்கும் மகிளா காங்கிரஸ் - போராட்டம்
தமிழின போராளி, பெண்களின் பாதுகாவலர் என கூறிக்கொள்ளும் சீமான் கே.டி ராகவனுக்கு ஆதரவாக பேசி இருப்பது வெட்கக்கேடானது என்று மகிளா காங்கிரஸ் தலைவி சுதா கூறியுள்ளார்.
சென்னை: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய சீமானை சும்மா விடமாட்டோம் என மகிளா காங்கிரஸ் தலைவி சுதா கூறியுள்ளார். தமிழின போராளி, பெண்களின் பாதுகாவலர் என கூறிக்கொள்ளும் சீமான் கே.டி ராகவனுக்கு ஆதரவாக பேசி இருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சீமானைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்றும் மகிளா காங்கிரஸ் தலைவி சுதா தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் குற்றவாளிகளுக்கு தலைவராகத் திகழ்கிறார் என்றும், கே.டி ராகவனுடன் கூட்டு குற்றவாளியாக அவர் செயல்படுகிறார் என்றும், மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார். பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய சீமானை சும்மா விடமாட்டோம் என எச்சரித்துள்ள அவர், சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆகிவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மகிளா காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கியமாக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவனுக்கு ஆதரவாக சீமான் பேசியதாகவும், அதை கண்டிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டார் எனவும் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகளிர் காங்கிரஸ் தீர்மானம்
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்துசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் நன்றியுடன் பாராட்டுகிறது.

பாலியல் வன்கொடுமை
வன்ம நடவடிக்கைகளில் புறையோடிக் கிடக்கும் பாஜகவையும்,நாடு முழுவதும் பெண்களுக்கு நடக்கும் தொடர் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் பாஜக நிர்வாகிகளையும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய அரசையும், மோடிஅவர்களையும், பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

பாதுகாப்பையே உறுதி செய்க
குறிப்பாக தமிழக பாஜகவில் மர்மமான முறையில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பத்திரிகைகளில் செய்தி வருவதால் தமிழக பெண்கள் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த இழிவான செயலில் ஈடுபட்ட கே.டி ராகவனை உடனடியாக கைது செய்யவேண்டும். தனது கட்சி பெண் நிர்வாகிகளின் பாதுகாப்பையே உறுதி செய்யத் தவறிய திராணியற்ற பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும்.

வன்மையான கண்டனம்
பாஜகவின் துரதிஷ்டவசமான பல பாலியல் சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத சீமான், பாஜக ராகவனின் பாலியல் சம்பவத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்திருப்பது,இருவரின் கூட்டு மனப்பான்மையையும், இழிவான செயல்பாடுகள் உடையவர்கள் என்பதை உறுதி செய்கிறது. நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்பொழுது பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டார். இந்த பெண் விரோத போக்கை கடைபிடிக்கும் சீமான் அவர்களை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொந்தளிப்பு
செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன், பாஜக ராகவனின் பாலியல் சம்பவத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்திருக்கும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் சவுமியா ரெட்டி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நியாயப்படுத்துவதா?
கூட்டத்தில் பேசிய மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், பாலியல் வீடியோ சர்ச்சையில் கே டி ராகவன் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோர். இந்நிலையில் அதே கே.டி ராகவனுக்கு ஆதரவாக இப்போது சீமான் வந்து இருக்கிறார். அவர் கே. டி ராகவன் உடன் கைகோர்த்து செயல்படுகிறார், கே.டி ராகவனின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசியிருக்கும் சீமானின் பேச்சால், தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அவர் மீது கொந்தளிப்பில் உள்ளனர். தமிழின போராளி, பெண்களின் பாதுகாவலர் என கூறிக்கொள்ளும் சீமான் கே.டி ராகவனுக்கு ஆதரவாக பேசி இருப்பது வெட்கக்கேடானது.

தலைவனாக மாறிய சீமான்
அவருக்கு எதிராக விஜயலட்சுமி நடத்திய போராட்டங்களை யாரும் எப்போதும் மறக்க முடியாது. ஒரு பாலியல் குற்றவாளியான சீமான் சக பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் காப்பாற்ற முயற்சி செய்கிறார். சீமான் இப்போது பாலியல் குற்றவாளிகளுக்கு தலைவனாக மாறிவிட்டார். சீமானை சும்மா விட மாட்டோம் தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியுள்ளார் சுதா.












Click it and Unblock the Notifications