பிளீஸ் 'ஜி'யை வேறு பக்கம் கூட்டிட்டு போங்க; மோடி பிரசாரத்துக்கு கேட் போடும் அமைச்சர்கள்.. என்னாச்சு!
சென்னை: தமிழகத்தில் பாஜக தலைவர்களின் பிரசாரத்துக்கு குறிப்பாக பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு அதிமுகவின் அமைச்சர்கள் சிலரே முட்டுக்கட்டை போடுவதாக தெரியவந்துள்ளது.
சிறுபான்மையின மக்கள் மத்தியில் மோடிக்கு பரவலாக எதிர்ப்பு காணப்படுவதால், அவர் பிரசாரம் செய்தால் அந்த வாக்குகள் பறிபோய்விடும் என்று அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பயப்படுவதாக தெரிகிறது.
புது சூறாவளி.. 'அதிர' வைக்கும் 'ஜோல்னா' பை வேட்பாளர்.. டிடிவிக்கு எகிறும் 'பிபி'
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புக்களில் பாஜக மீதான மக்களின் எதிர்ப்பு அதிமுகவில் எதிரொலிக்கிறது என்று கூறப்படுவதால் தங்கள் தொகுதியில் உள்ள கணிசமான வாக்குகளும் எதிரணிக்கு சென்று விடக்கூடாது என்பதில் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்.
பாஜக தலைவர்கள் பிரசாரம்
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் வருகின்றனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முக்கிய தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் நடத்த உள்ளனர் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் கவலை
ஆனால் இந்த பாஜக தலைவர்களின் பிரசாரத்துக்கு குறிப்பாக பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு அதிமுகவின் அமைச்சர்கள் சிலரே முட்டுக்கட்டை போடுவதாக தெரியவந்துள்ளது. ஒரு காலத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர்கள் தற்போது பிரதமரின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் 'கோ பேக்' மோடி என்ற பிரசாரம் டிவிட்டரில் டிரெண்டாகும். மோடி பிரசாரத்துக்கு வரும்போதும் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்து பதிவாவதால் தங்கள் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று சில அமைச்சர்கள் கவலைப்படுகின்றனர்.
சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்கும்
சிறுபான்மையின மக்கள் மத்தியில் மோடிக்கு பரவலாக எதிர்ப்பு காணப்படுவதால், அவர் பிரசாரம் செய்தால் அந்த வாக்குகள் பறிபோய்விடும் என்று அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பயப்படுவதாக தெரிகிறது. கோவையில் ஓரளவு செல்வாக்கு மிக்க பாஜக, அங்கு மோடியின் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் கோவையில் சக்திமிக்க நபராக வலம் வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ''பிரதமரை வேறு பக்கம் கூட்டிச் செல்லுங்கள்'' என்று நைசாக தமிழக பாஜக தலைமையிடம் நகூறியுள்ளாராம். தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிகளவு முஸ்லிம்கள் உள்ளதால் மோடியின் பிரசாரத்தால் அந்த வாக்குகள் பாதிப்படையும் என்று எஸ்.பி.வேலுமணி கவலைப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிதத்தன.
முட்டுக்கட்டை போடுகின்றனர்
நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் பாஜகவின் முக்கிய தலைவர்களை அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுத்தாராம். ஆனால் சுற்றியுள்ள அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த அதிமுக வேட்பாளர்களே நயினாருக்கு எதிராக நிற்பதாக தெரிகிறது. பாளையங்கோட்டை தொகுதியில் கணிசமாக உள்ள கிறிஸ்தவர்கள், அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் பறிபோய்விடும் என்று அஞ்சியே அவர்கள் முட்டுக்கட்டை போடுவதாக தெரிகிறது.