தமிழ்நாடு காவல்துறையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்.. நிர்வாக குளறுபடியா, உள்ளடி வேலையா?
சென்னை: சிவகங்கையில் அஜித் குமார் மரண வழக்கின் தாக்கம் தணிவதற்கு முன்பாகவே, மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேனின் அதிர்ச்சிப் புகார்கள் தமிழக அரசியலிலும், காவல்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை செய்யும் சில அத்துமீறிய சம்பவங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
நேற்று (ஜூலை 17, 2025) மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேன் அளித்த பேட்டியில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வதம் மற்றும் ஐஜி செந்தில்வேல் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் தனக்கு மனரீதியான தொந்தரவுகளை அளிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த நான்கு மாதங்களாக தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், ஓய்வூதியம் கிடைக்காமல் தடுக்கும் நோக்கில் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், லஞ்சம் வாங்கியதாக போலியான புகார்களை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கு செல்லத் தயார் என்றும் மனவேதனையுடன் கூறினார்.

தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு உயரதிகாரி தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படையாக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரிதான நிகழ்வாகும். இச்சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்து, காவல்துறையைக் கட்டுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேண், இந்த அரசுக்கு உயர் அதிகாரிகளே களங்கத்தை ஏற்படுத்துவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்பு ஒருமுறை போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, பாஸ் விவகாரத்தில் மோதல் வெடித்தது. தமிழக அரசின் இரு துறை ஊழியர்கள் மோதிக்கொண்டதும் அரிதான நிகழ்வுதான்.
இந்த நிலையில்தான், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வண்ணம் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
ஆனால், இது வலதுசாரிகளின் சதி என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் வலதுசாரிகள் அதிகார மையங்களில் முக்கிய இடம் பிடித்ததாகவும், அதன் பலனை தற்போது பார்ப்பதாகவும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் வேண்டுமென்றே வலதுசாரி ஆதரவு போலீசார் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ஏதேதோ செய்கிறார்கள் என்பது அக்கட்சியினர் வாதம்.
அதேநேரம், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், ஏன் திமுக அரசு தங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த திட்டமிடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை அதிமுகவினர் எழுப்புகிறார்கள். மேலும், அரசு வேலையில் இருக்கும் யாரும் இதுபோல வேண்டுமென்றே செய்து தங்கள் வருங்காலத்தை இழக்க விரும்பமாட்டார்கள், இது நிர்வாக குளறுபடிதானே தவிர வேறில்லை என்பது அதிமுகவினர் வாதம். இதில் உங்கள் கருத்து என்ன?












Click it and Unblock the Notifications