"எனக்கென சுயமரியாதை இருக்கிறது.." ஸ்டாலினை சந்தித்து வந்தவுடன்.. திட்டவட்டமாக சொன்ன ஓபிஎஸ்
சென்னை: இன்று காலை பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து சஸ்பென்ஸ் நிலவி வந்தது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் மாலை முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பாஜக உடனான கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது. இதனால் ஏற்கனவே பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் எதிர்காலம் என்னவாகும் என அரசியல் அரங்கில் கேள்வி எழுந்தன. ஓபிஎஸ் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களையும் கூட ஏற்கவே முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே எடப்பாடி இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதில் கேள்வி இருந்தது.

தமிழ்நாடு அரசியல்
இந்தச் சூழலில் தான் இன்று காலை முதல் தமிழ்நாடு அரசியல் அரங்கில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. முதலில் காலை முதல்வர் ஸ்டாலின்- ஓபிஎஸ் இருவரும் வாங்கிங் செல்லும்போது சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பு நடந்து கொஞ்ச நேரத்திலேயே என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கிடையே மாலை மீண்டும் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார் ஓபிஎஸ். அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். ஸ்டாலின் ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.
ஓபிஎஸ்
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் சில முக்கிய தெரிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்த பிறகு பாஜக தரப்பு பேசினார்களா என்ற கேள்வி, "இல்லை" என்று ஒரே வார்த்தையில் மட்டும் ஓபிஎஸ் பதிலளித்தார்.
சுயமரியாதை
பாஜக தரப்பு உங்களை அவமானப்படுத்தியதாகப் பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், "அப்படி எல்லாம் இல்லை. எனக்கென ஒரு சுயமரியாதை இருக்கிறது. அரசியலில் நான் ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் நேரடியாக பணியாற்றி இருக்கிறேன். கட்சி ரீதியாகவும் அரசு ரீதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். அனைத்தும் எனக்குத் தெரியும்.
இன்றைய கால சூழலில் எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சமக்ரா சிக்ஷா நிதி குறித்து கேள்வி எழுப்பினால்.. தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்காததால் நிறுத்தி வைத்திருப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் சொல்கிறார். ஜனநாயக நாட்டில் அது ஏற்புடையது இல்லை என்பதே எனது நிலைப்பாடு" என்றார்.
ஓபிஎஸ் நிலைப்பாடு
முன்னதாக தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம், திமுக உடன் கூட்டணி வைத்தால் மகிழ்ச்சி தான் என்பது போலக் கூறியிருந்தார். தங்கள் முதுகில் குத்தியவர்களுக்குப் பாடம் புகட்டுவதே முக்கிய நோக்கம் என்ற சுப்புரத்தினம், கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்.. யாருடன் கை கோர்க்கப் போகிறார் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications