கொரோனா வைரஸ் பிரச்சனை.. தமிழகம் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதா?
சென்னை: இந்தியாவில் 31 பேருக்கு மேல் கொரானா வைரஸ் தாக்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது.அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தான் இந்தியாவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 3 பேரும் குணமடைந்தனர். புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை. முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு அருகில் உள்ள தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகமாக உள்ளது. ஏனெனில் பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.அவர் பேருந்தில் பயணம் செய்து ஹைதரபாத் சென்று சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
சீனாவில் நடக்கும் அதிசயம்.. திடீரென்று குறையும் கொரோனா வேகம்.. எப்படி நடந்தது?.. பின்னணி இதுதான்!
ஸ்கிரீனிங் சோதனை
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெளிநாட்டவர்கள் வந்து இறங்கும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு விமான நிலையங்களில் ஸ்கிரீனிங் சோதனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் காய்ச்சல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சீனா, இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
நோயை தடுக்க
இதற்கிடையே தமிழக மாநில தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்களுடன் கூட்டங்களை நடத்தி, நோயை அடையாளம் காண்பது,கட்டுப்படுத்துவது, நோயாளிகளை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வது, நோய் பரவாமல் தடுப்பது ஆகியவை குறித்து விளக்க வேண்டும்.
சானிடைசர்கள்
அனைத்து மாவட்டங்களிலும் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பெரிய தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிமைப் படுத்திவைப்பதற்கான வார்டுகளை உருவாக்க வேண்டும். மருத்துவமனைக்குள் நுழையும் அனைவரது கைகளும் சானிடைசர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோல, வெளியேறுபவர்களும் தங்கள் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அந்த சானிடைசர்களில் 70 சதவீதம் ஆல்கஹால் இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு
எல்லா மாவட்டங்களிலும் காவல்துறை, கல்வித் துறை, உள்ளூராட்சிகள், வருவாய்த் துறை, ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பொது இடங்கள் அனைத்திலும் கையைச் சுத்தம் செய்யும் சானிடைசர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கிராமப்புறங்களிலும் நோய் தடுப்பு முறைகள், சுகாதாரத்துடன் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.