வேண்டும்... மீண்டும் அவகாசம் வேண்டும்... தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட மேலும் 4 வாரகாலம் அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் அடிப்படை பிரச்சனைகளை கூட முறையிட முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் சுயேட்சை வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்த பாஜக மூத்த தலைவரின் மகள்!
உறுதி
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக்கோரி திமுக சார்பாக வழக்கு தொடரப்பட்டு அது நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது.
4 வாரம் அவகாசம்
உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்ற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட தங்களுக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் யு டர்ன் அடித்துள்ளது. அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதிய அளவில் இல்லை என்பது தான்.
மனு
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப முடியாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு பெல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதனை சுட்டிக்காட்டி அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பற்றாக்குறை
வடகிழக்கு பருவமழையை காரணம் கூறி உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறதா என்கிற கோனத்தில் ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை என்ற காரணத்தை முன் வைத்து உள்ளாட்சித் தேர்தல் தள்ளிபோவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
எதிர்பார்ப்பு
இதனிடையே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீது உச்சநீதிமன்றம் இதுவரை எந்த முடிவும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை உச்சநீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அடுத்த 4 வாரத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பும் ஏதும் வெளியாகாது. ஆனால் நிராகரிக்கப்பட்டால் இம்மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.