இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்பாலம்.. 65 கிமீ.. ரூ.25 ஆயிரம் கோடி.. சென்னை கடலில் வரும் ராட்சச பாலம்
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை 65 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலுக்கு மேலே பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டமன்றத்தில் ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதற்கான டெண்டர் பணிகள் விரைவில் நடக்க உள்ளன.
கடல் வழிப் பாலம் திட்டம்
இந்தத் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஒருவேளை இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்று கட்டப்பட்டால், இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருக்கும். தற்போது 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலமே இந்தியாவின் நீளமான கடல் பாலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய கடல் பாலம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரின் பல பகுதிகளிலும் இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பப்படுகிறது.

குறைந்த நிலம் கையகப்படுத்தும் தேவை
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சாதகங்களில் ஒன்று, இது கடலுக்கு மேலே அமைக்கப்பட இருப்பதுதான். பாலம் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லாததால், நிலம் கையகப்படுத்துதலின் தேவை குறைவாக இருக்கும். இதன் விளைவாக, உள்ளூர் சமூகங்களுக்கு குறைவான பிரச்சனைகள் ஏற்படும். மேலும், மீனவர்களிடமிருந்து எதிர்ப்பு வருவதற்கான வாய்ப்பும் குறையும். ஏனெனில், முந்தைய சாலை திட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலம் கட்டும் பணி கட்டங்களாக நடைபெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை பாலம் கட்டப்படலாம். பின்னர், இது வடக்கு நோக்கி எண்ணூர் வரையிலும், தெற்கு நோக்கி பூஞ்சேரி வரையிலும் நீட்டிக்கப்படலாம்.
இந்த கடல் பாலம், சிறந்த சாலை மற்றும் துறைமுக இணைப்பை மேம்படுத்தும் அரசின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது. எண்ணூரை பூஞ்சேரியுடன் இணைக்கும் 133 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை வெளி வட்ட சாலைக்கு இது உறுதுணையாக இருக்கும். தமிழகத்தின் கடலோரப் பயணத்தை இந்த பாலம் மாற்றியமைக்கும் என்று அரசு நம்புகிறது. தற்போது, இந்தத் திட்டம் சாத்தியமாகுமா என்பதை தீர்மானிக்கும் சாத்தியக்கூறு ஆய்வு முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
பாலம் கட்டும் பணிகள்
மாறாக 21 கி.மீ சென்னை துறைமுக மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியாக வானகரத்தில் தூண்கள் வரத் தொடங்கியுள்ளன. கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக இங்கே தூண்கள் அமைக்கப்படாமல் பணிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது இங்கே துரிதமாக பணிகள் நடைபெற்று தூண்கள் வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். இந்த பணிகளின் ஒரு பகுதியாக சமீபத்தில்தான் அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டது. 20.9 கி.மீ. துறைமுகம்-மதுரவாயல் வழித்தடத்திற்காக இந்த கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை 200 மீட்டர் நிலத்தை மீட்டெடுத்து பணிகளை செய்து வருகின்றன.












Click it and Unblock the Notifications