சென்னைக்கு அருகே வரும் பிரம்மாண்டம்! ரூ.10,000 கோடியில் தைவானிய தொழிற்பூங்கா! டிஆர்பி ராஜா அறிவிப்பு
சென்னை: சட்டசபையில் இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக சென்னைக்கு அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தைவானியத் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அதன்படி இன்றைய தினம் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் பல்வேறு சட்டசபை உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

தைவானிய தொழில்பூங்கா
மேலும், துறையின் அமைச்சர் என்ற முறையில் டிஆர்பி ராஜாவும் பேசினார். அப்போது அவர் துறை ரீதியாகப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னைக்குச் சர்வதேச தைவானியத் தொழிற்பூங்காக்களை ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை எளிதாக்கும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கச் சம்பந்தப்பட்ட நாடுகளின் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். மேலும், அமைச்சர் டிஆர்பி ராஜா அப்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் டைடல் பூங்கா மற்றும் சிப்காட் பூங்கா அமைப்பது குறித்தும் அறிவிப்பை வெளியிட்டார்.
டைடல் பூங்கா
நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா மூலம் அமைக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் ரூ. 650 கோடி செலவில் 9000 பேர் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் 450 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல தென்காசி சங்கரன்கோவில் பகுதியில் 3000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என டிஆர்பி ராஜா அறிவித்தார். இது தவிர வேலூர் காட்பாடியில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்றார்.
சிப்காட்
மேலும், 250 கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பகுதியில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லது காலணி பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை ஜவுளி மையங்களாக உருவாக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் சிப்காட் டெக்ஸ் பார்க்ஸ் (SIPCOT Tex Parks) அமைக்கவுள்ளதாகவும் டிஆர்பி ராஜா தெரிவித்தார். அதேபோல தஞ்சை மாவட்டத்திலும் 100 ஏக்கரில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
நம்பிக்கை
இந்த பெரும்பாலான முதலீடுகள் வளரும் அல்லது பின்தங்கிய மாவட்டங்களில் இருப்பதால் அப்பகுதியில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெற உதவும் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். மேலும், தொழில் பூங்காக்கள் உள்ளூர் தொழிலை ஊக்குவிக்கவும் பெரியளவில் கை கொடுக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications