மேயர், நகராட்சி,பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்ய மார்ச் 4ல் மறைமுக தேர்தல்! செம எதிர்பார்ப்பு
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 4ஆம் தேதியன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியுள்ளார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுகவுக்கு இந்த தேர்தல் பெருந்தோல்வியை கொடுத்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வீடு, வீடாக பிரசாரம் செய்ய 3 பேருக்கே அனுமதி..வேறு என்ன கட்டுப்பாடுகள்?
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவை இடம்பெறுகின்றன. திமுக ஆட்சி அமைந்ததும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் புதியதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
வேட்புமனு
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இன்று வெளியிட்டார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ஜனவரி 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதியாகும். வேட்புமனுவை திரும்ப பெற இறுதி நாள் பிப்ரவரி 7ஆம் தேதியாகும்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம்தேதியன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும். மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.
நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழகம் முழுவதும் 12,838 உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 490 பேரூரட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறை
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் பிரச்சாரம் நடத்த வேண்டும். வாக்குப்பதிவு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் என்றும் பழனிச்சாமி தெரிவித்தார்.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
மேயர் , துணைமேயர் தேர்தல்
மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள். பேரூராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் மேயர், துணைமேயர் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவி நேரடியாக அல்லது மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது தொடர்ந்து வழக்கமாக இருந்து வருகிறது.
சென்னை மேயராக வென்ற ஸ்டாலின்
கடந்த 1996ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதுவரை கவுன்சிலர்கள்தான் மேயரை தேர்ந்தெடுத்தனர். இதன்படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயரை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றார். கடந்த 2001ஆம் ஆண்டும் மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது சென்னை மாநகராட்சி மேயராக 2வது முறையாக வென்றார் மு.க.ஸ்டாலின்.
நேரடி தேர்தல் ரத்து
கடந்த 2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதே அதிமுக அரசு 2011ஆம் ஆண்டில் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தது. 2016ஆம் ஆண்டில் அதிமுக அரசே, மேயர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்ய சட்ட திருத்தமும் கொண்டு வந்தது.
மறைமுக தேர்தல் நாளில் வேடிக்கை
தற்போதைய நிலையில் மாநகராட்சி மேயர் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள். பேரூராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் மேயர், துணைமேயர் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மறைமுக தேர்தல் நடைபெறும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குதிரை பேரம், பண பலம் கொண்டவர்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் வேடிக்கைகளும் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.