கடலோர மாவட்டங்களில் லேசான மழை - மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பனிமூட்டம்
தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சற்றே ஓய்வெடுத்து வருகிறது. கடந்த வாரங்களில் பெய்த மழையால் விளைநிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே மழை எங்கும் பதிவாகவில்லை. இந்த நிலையில் இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் வறண்ட வானிலை....ஜனவரி 6 வரை பனிமூட்டம் - அப்போ மழை அவ்ளோதானா?
11ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.