கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 30ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28,29ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
வடகிழக்குப் பருவமழை விலகி விட்டதாக வானிலை மையம் அறிவித்த பின்னர் ஆங்காங்கே பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரி மதுரை மாவட்டம் மேலூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2 செமீ மழையும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலும் இரவிலும் அதிகாலையிலும் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை விலகியது.... இனி வறண்ட வானிலைதான் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
லேசான மழை
புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை
28ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 29,30ஆம் தேதிகளில்
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்
28,29ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.