இனிமே தான் இருக்கு! அடுத்த ஒரு வாரம் கொளுத்தப் போகும் வெயில்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த 20 ஆம் தேதி மட்டும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதேபோல் கடந்த 21 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

அதன்பிறகு வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் வெப்பநிலை படிப்படியாக 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 24.03.2024 முதல் 30.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24.03.2024 முதல் 28.03.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications