இதுவே ஒரே பாரதம், உன்னத பாரதம்.. தமிழ் மக்கள் நெஞ்சங்களில் காசி வாழ்கிறது.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!
சென்னை: தமிழ்நாட்டிற்கும் வாரணாசிக்கும் கலாச்சார ரீதியாக, பண்பாடு ரீதியாக தொன்றுதொட்டு தொடர்பும் ஒற்றுமையும் இருந்து வருகிறது என்றும், ஒவ்வொரு தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் காசி வாழ்வதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் முதல் குழுவின் ரயிலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் காசி வாழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவை இந்தப் பயணம் நிறைவேற்றும். நீண்ட காலமாக நம் நாட்டில் உள்ளதை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சி இது.
ஆளுநர் பாவம்.. அண்ணாமலை அறிக்கை உப்பு சப்பில்லாதது.. ரவுண்டு கட்டி அடிக்கும் அமைச்சர் துரைமுருகன்!
கலாச்சார தொடர்பு
ஒரே பாரதம்தான் உன்னத பாரதம். அதற்கு இதுவே உதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவை புரிந்துகொண்டவர்கள் பாரதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் காசிக்குப் போக வேண்டும், காசியில் இருந்து வருபவர்கள் இங்கு வர வேண்டும். அதுவே பாரதம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே பாரதம். தமிழ்நாட்டிற்கும், வாரணாசிக்கும் கலாச்சார ரீதியாக, பண்பாடு ரீதியாக தொன்றுதொட்டு தொடர்பு மற்றும் ஒற்றுமை இருந்து வருகிறது.
காசியில் தமிழ்
தூரம் காரணமாக நாம் அதை தற்காலிகமாக மறந்துவிட்டோம். நிரந்தரமாக அதை மறக்கவில்லை. அதை மீட்கும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. காசியில் படகோட்டும் பலரும் என்னை விட நன்றாக தமிழில் பேசுவார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த கலாச்சார தொடர்பாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஒரே பாரதம், உன்னத பாரதம்
தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலாச்சார நிகழ்ச்சிகள் அங்கு நடக்க உள்ளது. பண்பாடு, இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவை பற்றி கலை நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற உள்ளது. தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்தில் இருந்து 270க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
காசி - தமிழ்நாடு தொடர்பு
நவ.19ம் தேதி அன்று வாரணாசியில் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எந்த ஓர் அரசியல் விமர்சனமும் கிடையாது. இது முழுமையாக தமிழகத்தின் கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் போற்றும் விதமாக நடைபெறுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காசிக்கும், நமக்கும் தொடர்பு உள்ளது. உன்னதமான தமிழ் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.