தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்.. தொடங்கியது அனல் பறக்கும் விவாதம்.. மே 10 வரை 2ம் கட்ட அமர்வு!
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது . துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்றில் இருந்து நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்
இதன் பின்னர் முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்றில் இருந்து நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டசபை
சட்டசபை நிகழ்வை முன்னிட்டு நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தில் என்ன செய்யலாம், எப்படி செயல்படலாம், ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார். துறை ரீதியாக செயலாளர்களிடம் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விளக்கங்களை கேட்டார்.

என்னென்ன துறைகள்
நீர்வளத்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழுங்கல் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, காவல்துறை, நிதித் துறை, பொதுத் துறை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை அரசினர் சட்ட முன்வடிவுகள் என்று பல்வேறு துறைகளில் இந்த விவாதம் நடக்க உள்ளது. மே 10ம் தேதி வரை கூட்டம் நடக்க உள்ளதால் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தொடரில் விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.

வரி விஷயம்
சொத்துவரி உயர்வு, அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாக்கா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் எழுப்பும் வாய்ப்புகள் உள்ளன. இன்று காலை அவை கூடியதும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். ஜார்ஜ் கோட்டையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications