35 தொகுதிகள்.. அடம்பிடிக்கும் பாஜக.. 25 தொகுதிகள் மட்டும்தான்! இறங்கி வர மறுக்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுகவிடம் குறைந்தபட்சம் 35 முதல் 45 தொகுதிகளை பெற பாஜக முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 தொகுதிகளுக்கு மேல் இறங்கி வர மறுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்தக் கட்ட நோக்கி நகராமல் இருப்பதாக தெரிகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே என்டிஏ கூட்டணியை இறுதி செய்துவிட்ட சூழலில், இன்னும் ஓரிரு கட்சிகள் வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளார். இதனால் தொகுதி பங்கீடு தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் பாஜகவுக்கான தொகுதி பங்கீடே முடியவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் பாஜக கேட்கும் தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இறங்கி வர மறுக்கிறார். லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. அதில் பாஜக 23 தொகுதிகளில் களமிறங்கியது.
அதில் பாஜக மொத்தமாக 12 தொகுதிகளில் 2ஆவது இடத்தை பிடித்தது. சட்டசபைத் தொகுதி வாரியாக பார்த்தால் பாஜக 59 தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்தது. அதேபோல் பூத் கமிட்டியை 61 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக தரப்பில் முதலில் 55 தொகுதிகள் வரை டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 25 தொகுதிகள் என்று சிக்னல் காட்டி இருக்கிறார். ஆனால் குறைந்தபட்சம் 35 முதல் 45 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜகவின் வேட்பாளர்களாக அத்தனை நட்சத்திர நிர்வாகிகளும் களமிறங்குவார்கள் என்று அதிமுக தலைமைக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலை போலவே நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை, ராம சீனிவாசன், வினோஜ் பி செல்வம், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், குஷ்பு, எஸ்ஜி சூர்யா உள்ளிட்டோர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் பாஜக நிர்வாகிகள் பல்வேறு தொகுதிகளிலும் பணிகளை தொடங்கிவிட்டதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications