இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகளே! ஆர்எஸ்எஸ் குறித்து பேச தகுதி உள்ளதா?பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது: கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆர் எஸ் எஸ் தலைவராக இருந்த குருஜி கோல்வால்கர் குறித்தும், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் தவறான, முறையற்ற விமர்சனத்தை முன்வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மன்னிப்பு கடிதம் கொடுத்த டாங்கே: கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே 1924ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டபோது மன்னிப்பு கடிதம் எழுதி சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கெஞ்சி கூத்தாடி யது கேவலம் இல்லையா? ரஷ்யா தாக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அதற்கு துணை நிற்பதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவளித்து 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததா இல்லையா?
இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகள்: 1962 சீன யுத்தத்தின் போது இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்டுகளை அன்றைய காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையில் அடைத்ததா இல்லையா? இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகளுக்கு தேச பக்த இயக்கமான ஆர் எஸ் எஸ் குறித்து பேச தகுதியுள்ளதா?
ஹிந்து மகா சபை, சோம்நாத் சாட்டர்ஜி: மகாத்மா காந்தியை கோட்ஸே கொலை செய்த போது ஹிந்து மகா சபா இயக்கத்தில் இருந்ததும், அன்றைக்கு அந்த இயக்கத்தின் தலைவராக இருந்தவர் நிர்மல் சந்திர சாட்டர்ஜி என்பது பின்னர் அவர் கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு மக்களவை உறுப்பினரானார் என்பதும், பல்வேறு கம்யூனிஸ்டு குற்றவாளிகளுக்கு வழக்கறிஞராக இருந்தார் என்பதும், அவரின் மகன் தான் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கிய சோம்நாத் சாட்டர்ஜி என்பதும் உண்மையா இல்லையா?
ஐந்துக்கும் பத்துக்கும் அலையும் கம்யூனிஸ்டுகள்: பாஜக தமிழகத்தில் அழிந்து விட்டது என்று சொல்லும் பாலகிருஷ்ணன் அவர்களே, உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டது இன்னும் உங்களுக்கு புரியவில்லையா? தேர்தலில் ஒரு இடத்திற்கு போட்டியிட தி மு கவிடம் கையேந்தி ரூபாய் 5 கோடி பெற்று கட்சியை அடகு வைக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு, உலகிலேயே அதிக உறுப்பினர்களை பெற்றிருக்கும் கட்சியான பாஜக வை விமர்சிக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை. தேர்தலுக்கு தேர்தல், ஐந்துக்கும், பத்துக்கும் அலையும் கம்யூனிஸ்டுகள் பாஜகவை விமர்சிப்பதா? இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கட்சி. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications