புதிய விவசாய சட்டங்களை கண்டித்து 'கண்டன மாநாடு'... தமிழக காங்கிரஸ் கமிட்டி சுறுசுறுப்பு..!
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் 'கண்டன மாநாடு' நடத்த உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
வரும் 11-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த கண்டன மாநாட்டில் பங்கேற்க பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டும் என கட்சியினருக்கும், விவசாயிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாஜக ஆட்சி
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என 2014 தேர்தலில் வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவிக்கிற துன்பங்களுக்கு அளவே இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெறுவதற்கு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை.

எதிர்காலம் கேள்விக்குறி
இந்நிலை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு , கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்கொலை சாவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதற்கு பா.ஜ.க. ஆட்சியின் தவறான விவசாய கொள்கை தான் காரணம். தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது.

மிருகப்பலம்
இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் கடந்த ஜூன் 5 ஆம் நாள் மூன்று அவசரச் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்தது. இதை செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் மிருகபல பெரும்பான்மையோடும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், குரல் ஓட்டெடுப்பு மூலம் பலவந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

டிராக்டர் பேரணி
'ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை' என்பதை நிலைநாட்டி, தனியார் பங்களிப்பை இச்சட்டம் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு மோடி அரசு இழைத்த மிகப்பெரிய அநீதியாகும். விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ்
இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வருகிற அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில் கண்டன மாநாடு திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டை ஒட்டி விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்கிறோம்? என்கிற நூலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. வெளியிடுகிறார்.

அழைப்பு
திருவண்ணாமலை மாநாடு தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தில் திருப்பம் ஏற்படுத்துகிற வகையில் அமைய இருக்கிறது. எனவே, இந்த சட்டங்களுக்குத் தமிழக விவசாயிகளின் கண்டனத்தை பா.ஜ.க. அரசுக்கு உணர்த்துகிற வகையில் திருவண்ணாமலை மாநாடு வெற்றிகரமாக அமைந்திட விவசாயப் பெருங்குடி மக்களை அன்போடு அழைக்கிறேன்.












Click it and Unblock the Notifications