அன்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க சொன்ன தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரியா இது?
சென்னை: 2019-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க சொல்லி அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று தனது கருத்துக்கே முரண்பட்டு பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக போராட்டத்தை நடத்தி இருக்கிறார்.
"இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மிக உயர்ந்த அமைப்பாக கருதுவது இந்திய அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தான். தேசியக் கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் மரியாதை செலுத்த வேண்டும். நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ, நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ கருதுவதில் எந்த பலனும் இல்லை.
உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு எல்லாவிதமான சாதக, பாதக அம்சங்களையும் மனதில் கொண்டு, வரலாற்று நிகழ்வுகளையும் மனதில் கொண்டு, தொல்லியல் துறையின் முடிவுகளையும் மனதில் கொண்டு, இன்றைய நாட்டு நடப்பினையும் மனதில் கொண்டு மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அவரவர்கள் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக் கொள்கிறது."

கே.எஸ்.அழகிரியின் 2019 அறிக்கை
பாபர் மசூதி வழக்கில் நிலம் முழுவதையும் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் அதை வரவேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்த கருத்துக்கள் இவை. உச்சநீதிமன்றத்தின் முக்கியத்துவத்தையும், அதனை ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

எதிர் நிலைபாடு
பாபர் மசூதி நில வழக்கு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அந்த சூழலில்கூட கே.எஸ்.அழகிரி அதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டின் உணர்வு சார்ந்த பிரச்சனையாக பார்க்கப்பட்ட எழுவர் விடுதலையில் எதிர் நிலைபாட்டை எடுத்திருக்கிறார்.

தமிழ்நாடே கொண்டாடும் தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலையை ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சியான அதிமுகவும், பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் தங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு கிடைத்த விடுதலையாக கருதி கொண்டாடி வருகின்றனர். அவரது தாய் அற்புதம்மாளின் 31 ஆண்டுகால போராட்டத்தை எண்ணி சிலாகித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி மன்னித்தும், மன்னிக்காத காங்கிரஸார்
ஆனால், இதே தமிழ்நாட்டில் அவரது விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலம் தழுவிய போராட்டத்தையே நடத்தி முடித்திருக்கிறது. ராஜீவ் காந்தி மீதான பற்றாக இது பார்க்கப்பட்டாலும், அவரது மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியே கொலையாளிகளை மன்னித்துவிட்டேன் என்று பேசிய நிலையில், கே.எஸ்.அழகிரி தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடு தமிழ்நாடு மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு இருக்கும் நற்பெயரை குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications