தமிழகத்தில் படுவேகமாக குறையும் கொரோனா.. தினசரி வைரஸ் பாதிப்பு 3600க்கு கீழ் சரிந்தது
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், இன்று வெறும் 3,592 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஓமிக்ரான் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கூட கடந்தது. இருப்பினும், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.
கடந்த ஜன. 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 3,592ஆகக் குறைந்துள்ளது. வரும் நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட மொத்தம் 3,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 34,28,068 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல பாசிட்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இப்போது அது 3.6ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாகக் கோவையில், 7.7ஆகவும் திருப்பூரில் 7.2ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களும் படுவேகமாக குறைந்து வருகிறது. நேற்று 77,607 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 66,992ஆக குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 14,182 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,23,214ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
தினசரி கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 தனியார் மருத்துவமனைகளிலும் 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு மற்றும் மதுரையில் தலா 3 பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,862 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
இன்று அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 663 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோவையில் 654 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவாகவே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications