நிம்மதி! தமிழகத்தில் மூவாயிரத்திற்கு கீழ் சரிந்த கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் 50,000 கீழ் குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் குறைந்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் தொடக்கம் முதல் பல்வேறு தளர்வுகள் உடன் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் திரையரங்குகள் 100% இருக்கைகள் உடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முடிவுக்கு வரும் 3வது அலை..? சரியும் கொரோனா பாதிப்பு.. ஐசிஎம்ஆர் கொடுத்த முக்கிய அப்டேட்
தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700ஐ தாண்டியது. அதன் பின்னர் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஒரே நாளில் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 2812 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34,33,966 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களும் மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. நேற்று 56,002 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 47,643ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களுக்குப் பின்னர் ஆக்டிவ் கேஸ்கள் 50 ஆயிரத்திற்குக் கீழாகக் குறைந்துள்ளது. இது தவிர இன்று ஒரே நாளில் மொத்தம் 11,154 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,48,419ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
உயிரிழப்புகளைப் பொறுத்தவரைத் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 தனியார் மருத்துவமனைகளிலும் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரை 37,904 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் மீண்டும் 3க்கு கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் பல வாரங்களுக்குப் பின்னர் பாசிட்டிவ் விகிதம் 3க்கு கீழ் குறைந்துள்ளது. இப்போது மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதம் 2.9ஆக உள்ளது. குறிப்பாகக் கோவையில் பாசிட்டிவ் விகிதம் 7%ஆகக் குறைந்துள்ளது.
மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
மாவட்ட ரீதியிலான பாதிப்பில் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 546 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கோவையில் தினசரி பாதிப்பு 523 ஆக உள்ளது. இவை தவிரச் செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், திருவரூர், திருப்பூர் மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.