சரசவரவென குறையும் தினசரி கொரோனா.. 2000க்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! உயிரிழப்புகளும் இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று தினசரி பாதிப்பு 2000க்கு கீழாகக் குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பரவ தொடங்கியது. இதன் காரணமாக அப்போது தமிழகத்தில் தினசரி கொரோனா உச்சம் தொட்டது.
அதன் பின்னர் பல மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தச் சூழலில் திடீரென சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
முப்படைகளின் ஒருங்கிணைந்து செயல்பட அசத்தல் திட்டம்! அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய தகவல்
தினசரி பாதிப்பு
கடந்த ஜன. 22இல் மூன்றாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு 30,700வரை சென்றது. அதன் பின்னர் அந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு செல்லவில்லை. இன்று மாநிலத்தில் மொத்தம் 34,966 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஆந்திராவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1945 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35,32,343 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று மாநிலத்தில் 15,843 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,409ஆக குறைந்து உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 5043 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 1801 பேரும் கோவையில் 1232 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளும் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த வாரத்தில் பல நாட்களில் தினசரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வந்தனர். இதனிடையே இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் மொத்தம் 2379 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,78,902ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
மாவட்ட வாரியாக பாதிப்பு
ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் கூட, மூன்று மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 419 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டில் 207 பேருக்கும் கோவையில் 179 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. ஓமிக்ரான் அலை ஏற்பட்ட சமயத்தில் 20 தாண்டிய பாசிட்டிவ் விகிதம் இன்று 5.8ஆக உள்ளது.