தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பரவல்.. ஒரே நாளில் 1307 சிறார்கள் வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 1307 சிறார்கள் உட்பட 34,875 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு வைரஸ் பரவல் வேகம் குறைந்திருந்தது.
மேலும், கடந்த சில தினங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு 33 ஆயிரத்திலேயே இருந்தது. இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,70,355 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 வயதுக்குட்பட்ட 1307 பேர் உட்பட மொத்தம் 34875 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16,99,225 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் எட்டு பேர் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்களாகும்.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சிகிச்சை பலனிற்றி 365 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 187 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 178 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் 72 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள். மேலும் 50 வயதுக்குக் குறைவானவர்களும் இன்று 85 பேர் இன்று பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் தற்போது வரை 18,734 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,53,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 23,863 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 14,26,915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தினசரி கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னையே முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 6297 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 91 பேர் தலைநகரில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவையில் 3250 பேருக்கும் செங்கல்பட்டில் 2275 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications