தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்.. 2ஆண்டுகள் சிறை
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் நிறைவடைந்துள்ளது. இனி வாக்குப்பதிவு முடிவு வரை தேர்தல் பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தக்கூடாது. மேலும் மின்னணு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரசாரம் செய்யக்கூடாது.
Recommended Video
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று மாலை தீவிர பிரசாத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
பிரசாரம் நிறைவு
அதேபோல மற்ற முதல்வர் வேட்பாளர்களான அமமுகவின் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கோவை தெற்கு தொகுதியிலும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
கட்டுப்பாடுகள் என்ன
இனி வாக்குப்பதிவு முடிவு வரை தேர்தல் பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தக்கூடாது. மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது. தேர்தல் பிரசாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் ஆகியவற்றிலும் தொலைப்பேசியில் குறுஞ்செய்தி மூலமும் பிரசாரம் செய்யக்கூடாது.
வெளியாட்கள் தங்கக் கூடாது
இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை 7 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறவேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியூர் ஆட்கள் தங்கக்கூடாது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் உள்பட வாகன அனுமதிகள் இரவு 7 மணிக்கு மேல் செல்லாது.
2 ஆண்டு சிறை
வாக்காளர்களை வாக்குச்சாவடி அழைத்துவர வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாடகைக்கு அமர்த்த அனுமதி இல்லை. வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை வேட்பாளர்களின் அரசியல் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை விதிமுறைகளை மீறுபவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.