5 மாவட்டங்களுக்கு செம லக்.. களமிறங்கிய அமீரகத்தின் டாப் நிறுவனம்.. முதல்வர் போட்ட ஒப்பந்தம்: பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான டிபி வேர்ல்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் 5 முக்கியமான மாவட்டங்களில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அங்கு பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், வர்த்தகங்கள் அதிகம் ஆகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
Recommended Video
கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள், முதலீடுகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டன. ஐடிசி ஹோட்டலில் நடந்த விழாவில் புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்டார்.
இயற்கை மின்சாரம், காற்றாலை மின்சாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் தொடர்பான திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இதில் முன்னுரிமை கொடுத்தது. இந்த நிலையில் சர்வதேச அளவில் இருக்கும் முக்கிய நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு இழுக்க அரசு முயன்று வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக நலிந்து போன துறைமுகத்துறை, வர்த்தக துறைகளில் முதலீடுகளை கொண்டு வர தமிழ்நாடு அரசு முயன்று கொண்டு இருக்கிறது.

முதலீடு
அதன் ஒரு கட்டமாகவே தற்போது தமிழ்நாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான டிபி வேர்ல்ட் நிறுவனம் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. துபாயை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க பல நாடுகளில் கார்கோ உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, துறைமுக பணிகள், மற்ற வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகிறது. துபாயில் மட்டும் 70 மில்லியன் கண்டெயினர்களை வருடத்திற்கு இந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி செய்து வருகிறது. அதாவது உலகின் மொத்த கண்டெயினர் வர்த்தகத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் மேல் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

என்ன நிறுவனம்
உலகம் முழுக்க வேறு நாடுகளில் டிபி வேர்ல்ட் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. உலகம் முழுக்க மொத்தம் 40 நாடுகளில் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. மொத்தம் 78 இடங்களில் துறைமுகங்களிலும், துறைமுகம் இல்லாத மற்ற வர்த்தக மையங்களிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இடையில் கொரோனா காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட இந்த நிறுவனம் தொடர்ந்து முக்கியமான வர்த்தக பணிகளை மேற்கொண்டு வந்தது. டிபி வேர்ல்ட் நிறுவனம் தனது முதலீடுகளை விரிவுபடுத்த நினைத்திருந்த சமயத்தில்.. நேரம் பார்த்து தமிழ்நாடு அரசு இவர்களை நோக்கி திருப்பி உள்ளது.

இந்தியா
இந்தியாவில் ஏற்கனவே கொச்சி, விஷாகப்பட்டினம், சென்னை துறைமுகங்களில் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தில் அதிக இடங்களில் டிபி வேர்ல்ட் நிறுவனம் முதலீடு செய்தது கிடையாது. ஆனால் இப்பபடிப்பட்ட நிறுவனத்தை தமிழ்நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி, திருவள்ளூர், சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. தூத்துக்குடியில் துறைமுகம் அருகே முதலீடு செய்ய உள்ளது.

டிபி வேர்ல்ட்
மற்ற திருவள்ளூர், சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்த நிறுவனம் வர்த்தகம் சார்ந்த முதலீடு செய்ய உள்ளது. 5 மாவட்டங்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், அங்கு வர்த்தகங்கள் அதிகம் ஆகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் டிபி வேர்ல்ட் நிறுவனம் அதிக முதலீடு செய்த ஒரே மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. 2000 கோடிக்கு ரூபாய்க்கு இந்த நிறுவனம் முதலீடு செய்கிறது. கார்கோ, கண்டெயினர் பயன்பாடு, துறைமுக மேம்பாடு, தகவல் தரவு மையம், வர்த்தக மையம், குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட பிரிவுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முதலீடு
தமிழ்நாட்டில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு இதனால் முதலீடு பரவி உள்ளது. முக்கியமாக கொங்கு மண்டலத்தை குறி வைத்து இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொங்கு மண்டலத்தில் இருந்து ஆடை ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள டிபி வேர்ல்ட் நிறுவனம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications