“ஹை அலர்ட்”.. வீசும் சூறாவளி காற்று! மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கும் நிலையில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மீன்வளத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 18 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக நவம்பர் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை உத்தரவிட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காற்று வேகம்
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், இன்று நவம்பர் 17 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை
(18.11.2022) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

65 கி.மீ. வேகம்
நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.












Click it and Unblock the Notifications