ஆர்டர் எடுக்க, தள்ளுவண்டி மூலம் விற்க அனுமதி.. தமிழகத்தில் வீடு தேடிவரும் மளிகை.. விதிமுறை என்ன?
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை பொருட்களுக்கான விற்பனை குறித்து புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மூலம் மளிகை பொருட்களை வீடு தேடி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தீவிர லாக்டவுன் அமலில் உள்ளது. கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புதிய லாக்டவுன் அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீட்டிப்பு
தமிழகத்தில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை பொருட்களுக்கான தட்டுப்பாடு வீடுகளில் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் தீவிர லாக்டவுன் என்றதும் மக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வைத்துவிட்டனர். ஆனால் தற்போது மேலும் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை பொருட்கள் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

கேள்வி
தமிழக அரசு இதற்கான வழியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

மளிகை
பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

வண்டிகள்
இதன் மூலம் இனி மளிகை பொருட்கள், மளிகை கடைகள் மூலம் நேரடியாக உங்கள் வீடுகளுக்கே கிடைக்கும். தள்ளு வண்டிகள் மூலமோ அல்லது போன் செய்து பக்கத்து கடைகளிலோ வாங்கிக்கொள்ள முடியும். இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்களை வாங்கலாம். ஆனால் தள்ளு வண்டி மூலம் பொருட்களை விற்க கடைகள் இதற்கு உள்ளாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்












Click it and Unblock the Notifications