‘₹'க்கு பதில் ‘ரூ'.. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த மு.க.ஸ்டாலின்.. நேரம் பார்த்து செய்த செயல்!
சென்னை: நாளை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லோர்க்கும் எல்லாம் என்ற வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் ரூபாய்க்கான அடையாள குறியீட்டிற்கு பதிலாக, தமிழ் எழுத்தான "ரூ" என்ற எழுத்தனை முதன்மைப்படுத்தி பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மொழி சர்ச்சை நீடித்து வரும் சூழலில், தமிழ் மொழியை முதன்மைப்படுத்தி பட்ஜெட் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில், பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். அதேபோல் தமிழ்நாடு அரசு தரப்பில் முதல்முறையாக பட்ஜெட்டிற்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக பட்ஜெட் தொடர்பான வீடியோ ஒன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மத்திய அரசின் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான "ரூ" என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் லோகோ-வாகவும், தமிழை முதன்மைப்படுத்தியும் "ரூ" அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேசிய அளவில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மிகப்பெரிய விவாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் அடையாள குறியீட்டை தூக்கிவிட்டு, அங்கு தமிழ் எழுத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்த செயல் தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.
இந்தியை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலச்சினை மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட.. திராவிட மாடல் பட்ஜெட் என்று ஹேஷ்டாக்குடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பட்ஜெட் இலச்சினையை மாற்றியதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் திமுக மற்றும் பாஜக இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications