மே 17ஆம் தேதி வரை.. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.. தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு!
சென்னை: மே 17ம் தேதிவரை, லாக்டவுனை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறப்பட்ட அம்சங்களின் படி தமிழகத்தில், ஊரடங்கை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மே 4-ம் தேதியிலிருந்து மே 17ஆம் தேதி வரை, அதாவது, மேலும் இரண்டு வாரங்களுக்கு தேசிய அளவில் லாக் டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேற்று வெளியிடப்பட்டது.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாகவும், ஓரளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத பகுதிகள் பசுமை மண்டலமாகவும் வகை பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் எந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்குவது என்பது பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்திருந்தது.
இந்த ஆலோசனையின்போது, மத்திய அரசு கூறியபடியே, ஊரடங்கை அமல்படுத்துவது என்றும், புதிதாக கெடுபிடி வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சிவப்பு மண்டல பகுதியாக இருந்தாலும், கண்டெய்ண்மென்ட் பகுதியை தவிர்த்து பிற பகுதிகளில் தொழில்கள் துவங்க முடியும்.
சிவப்பு மண்டலம்
தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பகுதியில் வருகின்றன. 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலம் என்ற பிரிவில் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பசுமை மண்டலத்தில் வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்புக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக நிதி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.
அமைச்சரவை
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசித்து அதற்கான அறிக்கையினை முதல்வரிடம் அந்த குழு நேற்று சமர்ப்பித்தது. இந்த நிலையில்தான் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது கிருஷ்ணன் தலைமையிலான குழு வழங்கிய அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
விரிவாக ஆலோசனை
இந்த ஆலோசனை மிக விரிவாக இருந்தது. 11 மணியிலிருந்து மதியம் சுமார் 2 மணிவரை 3 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு தொழில்துறை நிறுவனங்களின் கோரிக்கையும், மாவட்டங்களின் நிலவரமும் பரிசீலிக்கப்பட்டது.
தமிழகத்தில்
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.அனைத்து பகுதிகளிலும் தனிக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொரோனாவிடம் சிக்கியுள்ள சென்னையிலும் தனிக் கடைகள்இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 25% பணியாளர்களுடன் பொருளாதார சிறப்பு மண்டலங்கள், ஏற்றுமதி நிறுவனம் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.