"இந்தியர்" கிடையாது... இனிமேல் "பாரதியர்"தான்... நடைமுறைப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் (ட்விட்டர்) 'இந்தியர்' என்பதற்கு பதிலாக 'பாரதியர்' என நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணி பெயரை தொடக்கம் முதலே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாரத், பாரதம்: இந்நிலையில் "இந்தியா" என்ற பெயரை தவிர்க்கும் வகையில் 'பாரத்', 'பாரதிய' என்ற சொற்களை மத்திய பாஜக அரசு பயன்படுத்த தொடங்கியது. டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் 'இந்திய பிரதமர்' என்பதற்கு பதில் பாரத் என்றுதான் எழுதப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் விருந்து அழைப்பிதழிலும் பாரதிய ஜனாதிபதி என்றே அச்சிடப்பட்டது. இதனால் நாட்டின் பெயரையே "இந்தியா" என்பதற்கு பதில் "பாரத்' என மத்திய அரசு பாஜக மாற்றக் கூடும் எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்தியர் அல்ல பாரதியர்: மேலும் பல்வேறு பாஜக தலைவர்களும் "இந்தியா" என்பதற்கு பதில் பாரத் என்றே பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பதிவுகளில் "இந்தியர்" என்பதற்கு பதில் "பாரதியர்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது விவாதப் பொருளாகி இருக்கிறது.

ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவு: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், " ஆளுநர் ரவி, நெல்கட்டும்செவல் #பூலித்தேவன் நினைவு மாளிகையில் பழம்பெரும் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவருக்கு மலரஞ்சலி செலுத்தி ஆங்கிலேயரை ஒவ்வோர் பாரதியரும் எதிர்க்கத் தூண்டிய மற்றும் விடுதலைக்காக அவர்கள் போராடவும் உத்வேகம் அளித்த அவரது பங்களிப்பு & தியாகங்களை நினைவுகூர்ந்தார்" என பதிவிடப்பட்டுள்ளது.
சுய சார்பு பாரதம்: மற்றொரு பதிவில், ஆளுநர் ரவி, ஸோஹோ கிராமத்தைப் பார்வையிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சுயநிலைத்தன்மை மிகுந்த இந்த மாடலை பாராட்டிய ஆளுநர், சுயசார்பு பாரதத்தை உருவாக்கி வருவதில் மற்ற கிராமங்களுக்கு இது ஓர் லட்சியம் ஆகும் என்று குறிப்பிட்டார் எனவும் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications