பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் திருவள்ளுவர்- பாரதிய கலாசாரத்தை வடிவமைத்த திருக்குறள்: ஆளுநர் ரவி
சென்னை: பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவர் திருவள்ளுவர் என்றும் பாரதிய கலாசாரத்தை திருக்குறள் வடிவமைத்தது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ராஜ்பவன் RAJ BHAVAN, TAMIL NADU- @rajbhavan_tn ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: ஆளுநர் ரவி அவர்கள், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார். திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று #G20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆளுநர் ரவி தெரிவித்த வாழ்த்து: பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம். இவ்வாறு ஆளுநர் ரவி கூறியிருந்தார்.
டெல்லியில் கடந்த ஆண்டு திருவள்ளுவர் சிலையை ஆளுநர் ரவி திறந்து வைத்தார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, திருக்குறளின் ஒவ்வொரு குறளிலும் கோட்பாடு, நடத்தை, நெறிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. திருக்குறள் இவற்றை விட மிக, மிகப்பெரியது. அது தர்ம வேதத்தை உள்ளடக்கியது. திருக்குறளில் முதலாவது குறளே ஆதிபகவன் பற்றியது. ஜியுபோப் தமது மொழி பெயர்ப்பில், ஆதிபகவன் என்ற வார்த்தையை முதன்மை தெய்வம் என்று குறிப்பிட்டார், ப்ரைமல் டெய்ட்டி என்பது பழம் சமய சமூகத்தை குறிக்கும். சிலவற்றை பார்த்து அந்த சமூகத்தினர் பயப்படும்போது அதை போக்க அவர்கள் தெய்வத்தை உருவாக்கினர். ஆதிபகவன் என்பது வெறும் முதன்மை தெய்வம் மட்டும் கிடையாது. அதை விட சக்தி வாய்ந்தவர் ஆதிபகவன். அவர்தான் உலகை படைத்தார் என கூறியிருந்தார்.
அதன்பின்னர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் திருக்குறள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ரவி, ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அதைச் சரியாக மொழிபெயர்க்கவில்லை. அதை Primal Deity' என எழுதியிருக்கிறார். திருக்குறளைச் சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர் என மீண்டும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துகள் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.