பேரறிவாளனுக்கு தொடர்ந்து 6ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை 7ஆவது முறையாக நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே 28ஆம் தேதி, அவர் புழல் சிறையில் இருந்து திருப்பத்தூரில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட ஒரு மாத பரோல் நிறைவடைய இருந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால் தான் நன்மை என மருத்துவர்கள் கூறுவதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறுநீரக தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் எனத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு அவரது பரோல் நீட்டிக்கப்பட்டது.
சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றதால், அவரது தாயார் அற்புதம்மாள் பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்குப் பேரறிவாளன் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications