அடேங்கப்பா! சென்னையில் 500 ஏக்கரில் அமையும் "மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி.." தமிழக அரசின் கலக்கல் திட்டம்
சென்னை: தலைநகர் சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியை' அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ள போதிலும், விளையாட்டுத் துறையில் தமிழக வீரர்களால் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை என்ற குறை இருந்தது.
உலகத் தரத்தில் பயிற்சிகளைப் பெறத் தமிழ்நாட்டில் எந்தவொரு பயிற்சி மையமோ அல்லது கட்டமைப்போ இல்லை என்பதாலேயே தமிழக வீரர்களால் சாதிக்க முடிவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி
இந்நிலையில், செங்கல்பட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியை' அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரப்பில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தின் ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. மொத்தம் 20க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த விளையாட்டு நகரம் உருவாகிறது.

20க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்
வரும் காலத்தில் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது சர்வதேச வீரர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த விளையாட்டு நகரம் அமைகிறது. நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகளைக் கொண்ட மாபெரும் ஸ்போர்ட்ஸ் சிட்டியாக இதை உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சகல வசதிகள்
இது மட்டுமின்றி பணியாளர் குடியிருப்பு, உணவகங்கள், ஜிம் என்று பல்வேறு வசதிகளுடன் அமையவுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியை அமைக்கத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராயவும் டெண்டர் மூலம் நிபுணர் குழுவை ஒப்பந்தம் செய்யவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு நகரத்தின் கட்டுமான பணிகளை மிக விரைவில் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எங்கே அமைகிறது
ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளுக்கு இடையே திருபோரூர் பகுதியை அடுத்துள்ள திருவிடந்தையில் அமையும் இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியின் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால் தேசிய அளவில் அமையும் மிக முக்கியமான விளையாட்டு நகரமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமையும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications