தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!
சென்னை: தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 20,000 முகாம்கள் மூலம் மொத்தம் 15 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இருந்த போதும் கொரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான மெகா முகாம் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. முதல் கட்ட முகாமில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் சுமார் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இதனையடுத்து கடந்த 19-ந் தேதி 2-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 20,000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் சுமார் 15 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்- இன்று மாலை கரையை கடக்கிறது- ஆந்திரா, ஒடிஷாவுக்கு ஆரஞ்சு அலர்ட்
இது தொடர்பாக சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19-ம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.