1000 எலக்ட்ரிக் பேருந்துகள் உள்பட 7 ஆயிரம் புதிய பேருந்துகள்.. இனி ஓட்டை உடைச்சல் பஸ்ஸுக்கு குட்பை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்குள் 1000 பேட்டரி பேருந்துகளுடன் சேர்த்து புதியதாக 7 ஆயிரம் பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்யவுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் பேருந்துகளில் 52 சதவீதம் பழைய பேருந்துகளாக இருப்பதால் புதிதாக வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்தை பலர் நம்பியுள்ளனர். அதிலும் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் பல பேருந்துகளில் மேற்கூரையில் ஓட்டை ஏற்பட்டு மழை நீர் அருவி போல் கொட்டி வருகிறது. அது போல் பேருந்துகளில் சீட்கள் கிழிந்தும் அதில் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள் தனியாக பெயர்ந்தும் உட்காருவதற்கு இயலாத நிலையில் உள்ளன.
மேலும் பேருந்துகளின் படிக்கட்டுகளும் தனியாக கழன்று விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவை எல்லாம் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விஷயங்களாகும். இதனால் பயணிகளுக்கு விபத்துகள் ஏற்பட்டு காயங்கள் ஏற்படுகின்றன.
இதனால் பழைய பேருந்துகளை மாற்றும் விதமாக 7,030 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. பேருந்துகளின் சராசரி வயது 9 ஆண்டுகள் ஆகும் என போக்குவரத்து துறை சொல்கிறது. தமிழக மாநில போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான மெட்ரோ பாலிட்டன் கார்பரேஷன், மாநில விரைவு போக்குவரத்து கழகம் உள்பட 6 கழகங்களில் 20,260 பேருந்துகள் இருக்கும்.
அவற்றில் 18,728 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. 10, 582 பேருந்துகள் மிகவும் பழமையான பேருந்துகளாகும். கடந்த 3 ஆண்டுகளாக பேருந்துகளில் பராமரிப்பு செய்து வருவதால் ஒவ்வொரு 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் பேருந்து பழுதடைவது 10 சதவீதத்திலிருந்து 1 அல்லது 2 சதவீதமாக குறைந்துள்ளது என போக்குவரத்து துறையினர் தெரிவிக்கிறார்கள்.
நிதி நெருக்கடி இருந்த போதிலும் 2022- 2023, 2023- 2024 ஆகிய நிதியாண்டுகளில் தலா 1000 புதிய பேருந்துகளும் 2024- 2025 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. நாள்தோறும் அரசு பேருந்துகளில் 1.76 கோடி பயணிகள் பயணிக்கிறார்கள், அவர்களில் 51.47 லட்சம் பெண்களும் மற்றவர்களும் 7,179 சாதா பேருந்துகளில் இலவசமாக பயணிக்கிறார்கள்.
2666 பேருந்துகள் ஜெர்மன் வங்கியின் நிதியுதவியில் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளில் 52 சதவீதம் பழைய பேருந்துகளாகும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா லாக்டவுனால் நிதி நெருக்கடியால் புதிய பேருந்துகளை வாங்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications