உயிருடன் பிரபாகரன்- பண்ருட்டி வேல்முருகன், முத்தரசன் மகிழ்ச்சி; நேரில் சந்திப்பேன்- கே.எஸ்.அழகிரி
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் வேல்முருகன் எம்.எல்.ஏ.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சிதான் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்தார் என சொல்லப்பட்டது. அப்போது பிரபாகரன் உடல் எனவும் காட்டப்பட்டன.

இலங்கை ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்றே சொல்லி வருகின்றன. பிரபாகரனின் வலது கரமாக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாபனும் கூட பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே கூறி வந்தார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார்; அவரின் அனுமதியுடனேயே இதனை அறிவிக்கிறேன் என தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.

இருந்தபோதும் இந்த அறிக்கையை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதியாக இருந்தால் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரபாகரனை பழ.நெடுமாறன் எனக்கு காட்டினால் வரை நேரில் சந்திப்பேன். அதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications